RCB victory rally: 2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 18 ஆண்டுகள் கனவு நிறைவேறியதால், ஆர்சிபி அணியினர் மற்றும் அவரது ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.
கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே மறுநாள், அதாவது இன்று பெங்களூருக்கு சென்று ரசிகர்களுடன் வெற்றி விழா ஊர்வலத்தை நடத்தப்போவதாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்தது. இதனால் நேற்று இரவு முதலே ஊர்வலத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இச்சூழலில் பேரணி நடத்தினால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும் என்பதால், பெங்களூரு போலீசார் பேரணியை ரத்து செய்ததாக அறிவித்தனர்.
ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சமூக வலைத்தளங்களில் மாலை 5 மணி அளவில் வெற்றி பேரணி நடைபெறும் என அறிவித்தது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்ததால், கூட்டம் மேலும் அதிகரித்தது. சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்கும் வெற்றி விழா நிகழ்ச்சி நடக்க இருந்தது. அதை தொடர்ந்து பேரணியும் நடக்க இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
சரியான திட்டமிடல் இல்லை
இதன் காரணமாக ரசிகர்களின் கூட்டம் எக்குதப்பாக இருந்தது. கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மைதான சுவர் மீது ஏறி குதிக்கும் முயற்சிகள் மைதான வாயில்களை உடைக்கும் முயற்சிகள் நடந்தன. நிலைமை கையை மீறியதால், போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்க மடைந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்புகளுக்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் ஊர்வலம் நடந்த வேண்டும் என ஆர்சிபி நிர்வாகம் முடிவெடுத்தது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கர்நாடக அரசும் இந்த பேரணிக்கு அணுமதி கொடுத்திருக்க கூடாது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களும் நேரடியாக சின்னசாமி மைதானத்திற்கு வராமல், ஹோட்டல்களுக்கு சென்றுவிட்டு பின்னர் முதல்வரை சந்தித்துவிட்டு அதையடுத்துதான் மைதானம் வந்தனர்.
11 பேர் பலி
இதனால், ஆர்சிபி வீரர்கள் வரும் இடம் எல்லாம், கூட்டம் அதிகரித்து கொண்டே வந்தது. இதையெல்லாம் ஆர்சிபி நிர்வாகமும் கர்நாடக அரசும் முன்பே யோசித்திருக்க வேண்டும். போலீசார் ஊர்வளத்தை ரத்து செய்த நிலையிலும், ஆர்சிபி அணி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தது மிகப்பெரிய தவறு. சிறிதும் சிந்திக்காமல், கொண்டாட்டத்தை மட்டுமே மனதில் வைத்ததற்கு 11 உயிர்கள் பறிபோகி உள்ளன. இன்னும் பலர் உயிரிழக்கும் அச்சமும் உள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு கர்நாடக அரசும் ஆர்சிபி அணி நிர்வாகமுமே பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.
மேலும் படிங்க: ஆர்சிபி வெற்றி பேரணி.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு?
மேலும் படிங்க: மயான பூமியான சின்னசாமி மைதானம்! உள்ளே கொண்டாட்டம்-வெளியே மக்கள் பலி-வைரல் வீடியோ..