பேச்சு சுதந்திரத்துக்கு வரம்பு உள்ளது: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

லக்னோ: இந்திய ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பேச்சு சுதந்தித்திற்கு வரம்புகள் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உ.பி.யின் லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இதில் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை மறுத்துவிட்டது. விரிவான தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் ராகுல் காந்தியின் கோரிக்கையை நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி நேற்று நிராகரித்தார். அப்போது அவர், “அரசியலமைப்பு சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவானது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. என்றாலும் இந்த சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவதற்கு இந்தப் பிரிவு பாதுகாப்பு அளிக்காது” என்றார்.

முன்னதாக அரசுத் தரப்பில், “செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு வாய்ப்பு இருந்தும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அவரது கோரிக்கை ஏற்கத் தக்கதல்ல” என்று தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி தரப்பில் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.