டெல் அவிவ்: தங்கள் நாட்டின் மீது மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்’ என்று ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “ஈரானிய சர்வாதிகாரி தனது மக்களை அவர்கள் விரும்பாத ஒரு யதார்த்தத்துக்கு பிணைக் கைதிகளாக வைத்துள்ளார். இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான குற்றவியல் தாக்குதலுக்கு அவர்கள் பெரும் விலை கொடுப்பார்கள். அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை நோக்கி மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்” என்று கூறினார்.
ஈரான் நாட்டிலுள்ள அணுசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களைப் பயன்படுத்தும் அதேவேளையில், ஈரான் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஈரான் பதிலடி கொடுத்ததால், வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கோலான் ஹைட்ஸ் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை மணிகள் ஒலித்தன. பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர்.
பின்னணி என்ன? – ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் முழுவதும் குண்டுகள் வீசப்பட்டன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்ஃபகான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்நுட்ப மையம், மர்காஸி மாகாணம் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவையும் இஸ்ரேலின் தாக்குதலில் தகர்த்து அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில், ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் அப்துல் ஹமீது, அகமதுரசா, சையது அமீர் உசைன், மோட்லாபிசாடே, முகமது மெஹதி, அப்பாஸி ஆகிய 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது, ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இஸ்ரேலின் 2-வது தாக்குதலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ குடியிருப்புகள் மீது ட்ரோன்கள் துல்லிய தாக்குதல் நடத்தியதில், ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, இஸ்லாமிக் புரட்சி காவல் படையின் தளபதி உசைன் சலாமி, கதம் அல் அன்பியா என்ற ஈரான் போர் கட்டளை தலைமையகத்தின் தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பேசிய ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி, “இஸ்ரேல் தாங்கள் தாக்கியதால் அது முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது. அதுபோல இல்லை. அவர்கள் இதைத் தொடங்கி போரைத் தொடங்கினர். அவர்கள் செய்த இந்தப் பெரிய குற்றத்திலிருந்து அவர்கள் காயமடையாமல் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார். மேலும், ஈரானிய தாக்குதல்களைத் தடுக்க இஸ்ரேலுக்கு உதவினால், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்சின் தளங்கள் மற்றும் கப்பல்களைத் தாக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்தது.