டெல் அவிவ்: ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு நேர்ந்தது போலவே ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் நடக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஈரான் உடனான போர் வலுத்துள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறும்போது, “போர்க் குற்றங்களைச் செய்வதற்காகவும், இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்காகவும் ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன். இஸ்ரேலுக்கு எதிராக இதே பாதையை எடுத்த ஈரானுக்கு அண்டை நாட்டில் இருந்த சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்
இராக்கை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்த சதாம் உசேனின் ஆட்சி அமெரிக்க படையெடுப்புக்குப் பின்னர் 2003-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அவர் 2006-ம் ஆண்டு தூக்கிடப்பட்டார். தற்போது இதனை குறிப்பிட்டு ஈரான் மதத் தலைவரை இஸ்ரேல் மிரட்டியது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய மற்றும் வடக்கு தெஹ்ரானில் இருந்து இரண்டு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புக்கான காரணம் அல்லது துல்லியமான இடம் குறித்து உடனடித் தகவல் எதுவும் இல்லை.