ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவின்போது இந்தூர் தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ம.பி.யின் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரகுவன்சி கொலைக்கு முன் மேகாலயாவில் ஒரு ஸ்கூட்டி வாடகைக்கு எடுக்கப்பட்டது. பிறகு கைவிடப்பட்ட நிலையில் இது மீட்கப்பட்டது. இந்த ஸ்கூட்டி முறைப்படி பதிவு செய்யப்படாத ஒரு வாகனம் எனத் தெரியவந்தது.
இந்நிலையில் மேகாலயாவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்தவும் வாடகைக்கு விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களும் இத்தடை பொருத்தும். தடையை மீறினால் அபராதம், வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.