புதுடெல்லி: குரோஷியா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு சென்றிருந்தார். இதில், முதலில் சைப்ரஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், 18-ம் தேதி அங்கிருந்து குரோஷியாவுக்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொணடது இதுதான் முதல் முறை ஆகும்.
அங்கு அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலனோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, வேளாண்மை, கலாச்சாரம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இருதரப்பு உறவுகளுக்கு மூன்று மடங்கு வேகத்தை வழங்க நானும் குரோஷிய பிரதமரும் முடிவு செய்துள்ளோம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒரு திட்டம் வகுக்கப்படும்” என்றார்.
இதையடுத்து, 3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார் என பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.