ராஜ்கோட்,
குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் தலஜா நகரருகே கிராமம் ஒன்றில் 22 வயது இளம்பெண் ஒருவர், பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த சகோதரருடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
அந்த சகோதரருக்கு திருமணம் நடந்து விட்டது. இந்நிலையில், அவருடைய மனைவி கடந்த ஜூலை 13-ந்தேதி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அந்த நபர் இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன்பின்னர், கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி 2-வது முறையாகவும் சகோதரியை அந்நபர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனுடன் இளம்பெண்ணின் வலது தொடையில் பீடியால் சூடும் வைத்துள்ளார்.
இதனால், அலறி துடித்த அவர், இந்த முறை துணிச்சலாக புகார் அளிக்க முடிவு செய்து போலீசுக்கு சென்றுள்ளார். இளம்பெண் அந்த கிராமத்தில் உள்ள இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.
இந்த விவரம் மூத்த சகோதரருக்கு முன்பே தெரிந்துள்ளது. காதலை கைவிட செய்யும் வகையில், அதனை பயன்படுத்தி அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த விவரம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி விசாரணை அதிகாரி டி.பி. காம்பிளா கூறும்போது, குற்றவாளி பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்தின்போது அவர் அணிந்திருந்த ஆடைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்றார்.