புதுடெல்லி: மருந்துக் கடைகளில் இருப்பில் உள்ள ஓஆர்எஸ் முத்திரையுடன் கூடிய இனிப்பு பானங்களை விற்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. உலகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில் ஐந்தில் ஒரு மரணம் வயிற்றுப்போக்கால் ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கின்போது நீரிழப்பை தடுக்க உப்பு-சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் ஓஆர்எஸ் கரைசலில் 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட், 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும்.
ஆனால் இந்திய சந்தையில் ஓஆர்எஸ் முத்திரை ஒட்டி விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான பானங்களில் இந்த விகிதம் பின்பற்றப்படவில்லை. இதுதொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் உள்ளிட்டோர் மத்திய அரசிடம் முறையிட்டனர். இந்த விவகாரம் குறித்து இந்திய மருந்து பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) விரிவாக ஆய்வு நடத்தி கடந்த அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.
‘‘பாட்டில்களில் விற்கப்படும் பழச்சாறுகள் உள்ளிட்ட பானங்களில் ஓஆர்எஸ் முத்திரையை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது. இதை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஓஆர்எஸ் பானங்களை தயாரித்து விற்பனை செய்ய உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் அவசியம்’’ என்று எப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டது.
இந்த உத்தரவை பின்பற்றி தமிழக சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்ட உத்தரவில், “ஓஆர்எஸ்எல், ஓஆர்எஸ்எல் பிளஸ், ஓஆர்எஸ் பிட் உள்ளிட்ட பெயர்களில் பானங்களை விற்பனை செய்யக்கூடாது. ஓஆர்எஸ் பெயரில் இனிப்பு பானங்களை விற்பனை செய்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மருந்தகம், கடைகளில் ஆய்வு நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்திய மருந்து பாதுகாப்பு, தர நிர்ணய ஆணைய உத்தவை எதிர்த்து டாக்டர் ரெட்டிஸ் லேபாரெட்டீஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் நீலிமா திரிபாதி, சனம் திரிபாதி, கவுசிக், கீர்த்தி சர்மா, ஹர்சித் சிங் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இந்திய மருந்து பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி சச்சின் தத்தா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அவர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஓஆர்எஸ் முத்திரையுடன் விற்பனை செய்யப்படும் இனிப்பு பானங்களுக்கு இந்திய மருந்து பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) தடை விதித்துள்ளது. இது மக்களின் உடல் நலன் சார்ந்த விவகாரம் ஆகும். இதில் சமரசத்துக்கு இடமில்லை. எப்எஸ்எஸ்ஏஐ பிறப்பித்த உத்தரவு செல்லும்.
தற்போது மருந்தகங்கள், கடை களில் இருப்பில் இருக்கும் பானங்களை விற்பனை செய்ய டாக்டர் ரெட்டிஸ் லேபாரெட்டீஸ் லிமிடெட் நிறுவனம் விடுத்த கோரிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன். மருந்தகங்கள், கடைகளில் இருப்பில் உள்ள ஓஆர்எஸ் பானங்களை விற்க எப்எஸ்எஸ்ஏஐ விதித்த தடை தொடரும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.