ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் – சிக்கவைத்த சிசிடிவி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம், நகைகள் மற்றும் பட்டாடைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் ஒவ்வொரு மாதமும் கோயில் அம்மன் சன்னிதி அனுப்பு மண்டபத்தில் வைத்து எண்ணப்படும்.

கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. கோயிலின் பிரதான உண்டியல்கள் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறப்பில் அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று காணிக்கைகளை எண்ணினர். இதன்படி சுமார் 2 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 165 ரூபாய் மற்றும் பலமாற்று பொன் இனங்கள் 85 கிராம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியன காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

ராமேஸ்வரம் கோயில்
கோயில் ஊழியர் மணிகண்டன்

இதனிடையே உண்டியல் எண்ணிக்கையின் போது காணிக்கை பணத்தினை, கோயிலில் தூய்மை பணியாளராக பணியாற்றும் மணிகண்டன் என்பவர் திருடியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதில் மணிகண்டன் ஒரே நாளில் 3 முறை பணத்தினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து திருக்கோயில் செயல் அலுவலர் மாரியப்பன், பணத்தை திருடிய மணிகண்டன் மீது கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர். இவர் ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2023-ல் இங்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்த நிலையில் மணிகண்டன் இது போல காணிக்கை பணத்தில் கைவத்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.