அலை கடல்: "இது கல்கிக்கு டிரிப்யூட்!" – பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே அலை கடல்18

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்து அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.

Alaikadal Song - Lyricist Siva Ananth
Alaikadal Song – Lyricist Siva Ananth

இன்றைய பகுதிக்கு, ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் வரும் ‘அலைகடல்’ பாடல் பற்றிப் பாடலாசிரியர் சிவா அனந்திடம் பேசினோம்.

பூங்குழலி கதாபாத்திரத்திற்கான இப்பாடலில் தத்துவங்களை நிறைத்து எழுதியிருப்பார் சிவா அனந்த். இந்தப் பாடல் பற்றி அவர்….

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் அத்தனை அழகான பாடல்களையும் இளங்கோ கிருஷ்ணன்தான் எழுதியிருந்தார். அவர் திரைப்படத்திற்குள் வருவதற்கு முன்பே இந்தப் பாடலை நாங்கள் முடித்துவிட்டோம்.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்ட பாடல் ‘அலை கடல்’தான். படப்பிடிப்பு தொடங்குவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பே இப்பாடலைத் தயார் செய்துவிட்டோம்.” என்றவர், “‘பொன்னியின் செல்வன்’ நாவலிலேயே இந்தப் பாடல் இடம்பெறும் இடத்தில் கல்கியே ஒரு பாடலை எழுதியிருப்பார்.

அதேபோல், வந்தியத்தேவன் குதிரையில் செல்லும் இடத்திலும், கடம்பூர் கோட்டை காட்சிகளிலும் பாடல்கள் வந்தால் நன்றாக இருக்குமென நாவலை வாசித்த அனைவருக்கும் தோன்றும்.

Alaikadal Song - Lyricist Siva Ananth
Alaikadal Song – Lyricist Siva Ananth

இயக்குநர் மணிரத்னம் சாரும், ஏ.ஆர். ரஹ்மான் சாரும் இந்தப் பாடலுக்கான டியூனை முன்பே தேர்வு செய்து வைத்திருந்தனர். பூங்குழலிக்காகக் கல்கி எழுதிய ‘அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்ற வரியை ஏதோ சில காரணங்களால் அப்படியே பயன்படுத்த முடியவில்லை.

ஆனால், அவருக்கு ட்ரிபியூட் (Tribute) செலுத்தும் விதமாக, ‘அலை கடல்’ என்ற அதே வார்த்தையில் பல்லவியை எழுதத் திட்டமிட்டோம். நான் ஏற்கெனவே மணிரத்னம் சார் தயாரித்த ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் பாடல்கள் எழுதியிருந்ததால், ‘நீயே இதை முயற்சி செய்கிறாயா?’ என என்னிடம் அவர் கேட்டார்.

‘அலை கடல்’ பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் வரும். நான் இந்த நாவலை பலமுறை வாசித்திருப்பதால், இந்தச் சூழல் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ரஹ்மான் சார் இந்த டியூனை பியானோவில் வாசித்துக் காட்டினார்.

அது வெறும் இசைக்கருவியின் சத்தமாக இல்லாமல், அதிலொரு உயிர் இருப்பதை உணர்ந்தேன். அந்த இசையின் வேகம், ரிதம் மற்றும் இடைவெளிகளை ரசித்துக் கேட்டு ஒரே நாளில் எழுதி முடித்தேன். காலை வேளையில் இந்தப் பாடலை என்னை எழுதச் சொன்னார்கள். அன்று இரவே பதிவு செய்யப்பட்டது.

Alaikadal Song - Lyricist Siva Ananth
Alaikadal Song – Lyricist Siva Ananth

இந்தப் பாடலுக்கு எனக்குப் பெரிய உத்வேகமாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன்தான். காதல் பாடல்களில் கூட தத்துவத்தைப் புகுத்துவதில் அவர் மன்னர்.

பூங்குழலி ஒரு ஓடக்காரப் பெண். அவளுக்குப் பெரிய வார்த்தைகள் தெரியாது, ஆனால் வாழ்க்கையைத் தெரிந்தவள்.

தனிமையில் படகு ஓட்டும்போது அவளுக்குப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு தனிப் பார்வை இருக்கும். அந்தத் தனிமையின் தத்துவத்தை எளிமையான சொற்களில் கொடுக்க முயன்றேன்.

எனக்கு வாலி எழுதிய ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாடல் மிகவும் பிடிக்கும். அமைதியான நீர்நிலையில் நிலவின் நிழல் விழும்போது, அந்த நிலவுக்கு அந்த நீரின் ஆழம் தெரியும் என்று எனக்குத் தோன்றியது.

அந்தச் சிந்தனையில் உருவானதுதான், ‘அலை கடல் ஆழம் நிலவறியாதோ… அடிமனதாகம் விழியில் தெரியாதோ’ என்ற வரிகள்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்

பெண் பார்வையில் நகரும் பல நல்ல பாடல்களை ஆண் பாடலாசிரியர்கள்தான் எழுதியிருக்கிறார்கள். எனக்கு நண்பர்களை விடத் தோழிகள் அதிகம் என்பதால், பெண்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

எழுதி முடித்ததும் எனக்குப் பெரும் திருப்தியும் கிடைத்தது. ரஹ்மான் சாரும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். அப்படித்தான் இந்தப் பாடல் உருவானது. என் வாழ்க்கையில் நான் பெருமைப்படும் பாடல்களில் இதுவும் ஒன்று” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.