மாதவிடாய் விடுமுறை: “உடனடியாகவும், கட்டாயமாகவும் அமல்படுத்துக!" – கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

கர்நாடகாவில் உள்ள அனைத்து பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ‘மாதவிடாய் விடுமுறை’ (Menstrual Leave) வழங்கும் கொள்கையைத் தடையின்றி அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகாவைச் சேர்ந்த சந்திரவ்வா ஹனுமந்த் கோகாவி என்பவர், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “2025-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி கர்நாடக அரசு வெளியிட்ட அந்த அரசாணையில், பெண் தொழிலாளர்களுக்கான ‘மாதவிடாய் விடுமுறை’ ஒவ்வொரு மாதமும் 1 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். 18 வயது முதல் 52 வயது வரையிலான பெண் ஊழியர்கள் அனைவரும் இதற்குத் தகுதியானவர்கள்.

கர்நாடக உயர் நீதிமன்றம்

இதில் நிரந்தர ஊழியர்கள் மட்டுமன்றி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் வெளிப்பணி ஊழியர்களும் அடங்குவர் எனக் குறிப்பிட்டிருந்தது. இந்தக் கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல நிறுவனங்கள் இதைப் பின்பற்றுவதில்லை. ஊழியர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே, இதனை உடனடியாகவும் கண்டிப்பாகவும் அமல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, “18 முதல் 52 வயது வரையிலான அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட வேண்டும். இதற்கென தனியாக ‘கர்நாடக மாதவிடாய் விடுமுறை மற்றும் சுகாதார மசோதா-2025’ சட்டமாகக் கொண்டுவரப்படும் வரை, தற்போதுள்ள கொள்கையை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் சட்டம், கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், தோட்டத் தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிரந்தர, ஒப்பந்த மற்றும் வெளிப்பணி பெண் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.” என நீதிபதி குறிப்பிட்டார்.

மாதவிடாய்

அதைத் தொடர்ந்து தீர்ப்பில், “சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சமம் என்றாலும், அவர்கள் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள். ஆரோக்கியம், கண்ணியம் மற்றும் உடல் சுயாட்சி தொடர்பான விஷயங்களில் இத்தகைய வேறுபாடுகளை அங்கீகரிப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ‘சமத்துவ’ உரிமைக்கு எதிரானது அல்ல. மாறாக அது சமத்துவத்திற்கு ஒரு முழுமையான அர்த்தத்தைத் தருகிறது,” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தொழிற்சங்கங்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குழுவினர் இந்த விடுமுறை கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், இந்த மாதவிடாய் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில முதலாளிகள் சங்கங்கள் மட்டுமன்றி, 15 பெண் தொழில்முறை நிபுணர்களும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் தற்போது வேறொரு நீதிபதியிடம் விசாரணையில் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.