"பிரதமரை மந்திரவாதி எனச் சொல்வது தரம் தாழ்ந்த பேச்சு.!" – ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ” இந்த மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்கு தெரியும். அவர்கள் முட்டாள்கள் அல்ல.

எதிர்க்கட்சிகள் இந்த அளவுக்கு கடுமையாக இதை எதிர்ப்பதால் இது நிறைவேறாது என்பதை அவர்களுக்கு நன்றாக தெரியும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஆளும் கட்சியின் இந்த முயற்சிக்கு முக்கிய காரணம் ஒரு மந்திரவாதி. அந்த மந்திரவாதி நமது நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்ற விரும்புகிறார்.

பெண்களுக்கு ஆதரவானவர் என தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறார். அந்த மந்திரவாதிக்கும் ஒரு தொழிலதிபருக்கும் இடையே ஒரு கூட்டணி இருப்பது அனைவருக்கும் தெரியும்.

பணமதிப்பிழப்பு, ஆப்ரேஷன் சிந்தூர் என பல மாயாஜாலத்தை நிகழ்த்திய மந்திரவாதி தற்போது பிடிப்பட்டிருக்கிறார்” என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி சாடியிருந்தார்.

அவரின் கருத்துக்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பாஜக எம்பியும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை மந்திரவாதி என குறிப்பிடுவது தரம் தாழ்ந்த பேச்சு.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இவ்வாறு பேசுவதை அனுமதிக்க முடியாது. பிரதமரின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனது தரம் தாழ்ந்த பேச்சுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “ராகுல் காந்தி கண்ணியத்துடன் பேச வேண்டும். நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு பிரதமரை தரம் தாழ்ந்து கிண்டல் செய்வது அடாவடித்தனமானது.

இப்படி பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

மேலும் ராகுல் காந்தி கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தொடர்ந்து பேச அனுமதிக்க முடியாது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.