பிப்ரவரி 27-ம் தேதி – ஈரான் போருக்கு முந்தைய நாள், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 67.29 டாலர்.
ஆனால், அதன் பிறகான இந்த 56 நாள்களில் பல முறை கச்சா எண்ணெயின் விலை 100 டாலரைத் தாண்டிவிட்டது… உச்சமாக 119 டாலரைக்கூட தொட்டது.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை, எப்போதெல்லாம் ஹார்முஸ் ஜலசந்தி குறித்த பேச்சும், பிரச்னையும் எழுகிறதோ… அப்போதெல்லாம், கச்சா எண்ணெயின் விலை 100 டாலரைத் தாண்டியிருக்கிறது… இது இந்தப் போர் முடியும் வரை, இனியும் தொடரும்.

பேச்சுவார்த்தை… போர் நிறுத்தம்… ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதி போன்ற செய்திகள் சந்தையை எட்டிப் பார்த்தால், கச்சா எண்ணெய் விலை 90-100 டாலருக்குள் வர்த்தகம் ஆகிறது.
ஈரான் போர் முழுவதும் முடிந்துவிட்டால், கச்சா எண்ணெயின் இந்த விலை பிரச்னை ஓய்ந்துவிடுமா…. கச்சா எண்ணெய் மீண்டும் 50-70 டாலரை எட்டுமா என்கிற கேள்விக்கு, பொருளாதார நிபுணர்கள் ‘இல்லை’ என்று பதில் கூறுகிறார்கள்.
ஈரான் போர் முடிந்தாலும் கச்சா எண்ணெயின் விலை 85 டாலரைச் சுற்றியே இருக்கும்.
இதற்கு காரணம்…
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்க, அவர்களுக்குப் பதிலடி கொடுக்க, ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.
அப்படி ஈரான் தாக்கிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன், ஈராக், ஓமன் என நாடுகளின் பெயர்கள் நீள்கிறது.
இந்த நாடுகள் அனைத்தும் தங்களுடைய பெரும்பாலான எண்ணெய் கட்டமைப்புகளைப் போர் காரணமாக மூடிவிட்டன… எண்ணெய் உற்பத்தியையும் நிறுத்திவிட்டன.

இதற்கு போர் மட்டும் காரணமல்ல… ஒருவேளை கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து எடுத்தாலும், அதை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அதை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவும் முடியாது. ஏனெனில், மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வர்த்தகத்திற்கு பெரும்பாலும் பயன்படுத்தும் ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது.
ஆக, பாதிப்படைந்த கட்டமைப்புகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் உற்பத்தியைத் தொடங்கி, மீண்டும் சப்ளைகள் சீராக நாள்கள்… மாதங்கள் தேவைப்படும்.
அதனால் தான், கச்சா எண்ணெய் விலை பீப்பாவிற்கு 85 டாலர் அளவில் தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில், பெட்ரோல், டீசலைப் பொறுத்த வரை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் எத்தனை டாலருக்கு விற்கப்பட்டாலும், வரி, எண்ணெய்க்கு பிற நாடுகளைச் சார்ந்திருப்பது போன்ற காரணங்களால் எப்போதும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகவே இருக்கும்.
அதனால், இப்போது ஈரான் போர் காரணமாக, இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணவில்லை.
ஆனால், கேஸ் சிலிண்டர் விலை அப்படியில்லை. ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலை ஒருமுறையும் (மார்ச் 7, 2026), வணிக பயன்பாடு சிலிண்டர் விலை இருமுறையும் (மார்ச் 7, ஏப்ரல் 1, 2026) உயர்ந்துவிட்டது.

கச்சா எண்ணெயை பெட்ரோல் அல்லது டீசலாக மாற்றும் நடைமுறையில் வெளியேறும் ப்ரோப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களைக் கொண்டு தான் எல்.பி.ஜி சிலிண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆக, மூலப்பொருள்கள் விலை உயர்ந்திருக்கும் போது, மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.
மேலும், இந்த உயர்வு… கேஸ் சிலிண்டர் தடையில்லாமல் கிடைப்பது எல்லாம் மத்திய கிழக்கில் உள்ள கட்டமைப்புகல் சரிசெய்யப்பட்டு… மீண்டும் உற்பத்தி தொடங்கும் வரை… ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து வழக்கத்திற்கு திரும்பும் வரை… உலக அளவில் கச்சா எண்ணெயின் சப்ளை நிலையாகும் வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.