காடுகளின் குரலாகவும், வனவிலங்குகளின் பாதுகாவலராகவும் அறியப்படும் டாக்டர் கிருத்தி கரந்த், தற்போது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளார். ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ அமைப்பு வழங்கும் 2026-ஆம் ஆண்டிற்கான ‘ஆண்டின் சிறந்த ஆய்வாளர்’ விருதை வென்று அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் உலக அளவில் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் இந்த விருதைப் பெறும் முதல் ஆசியப் பெண்மணி இவர்தான் என்பது இந்தியாவிற்குத் தனிச்சிறப்பு.

பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் கிருத்தி கரந்த், ஒரு புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாப்பு அறிவியலாளர் மற்றும் ‘சென்டர் ஃபார் வைல்ட்லைஃப் ஸ்டடீஸ்’ அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர். புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் கே. உல்லாஸ் கரந்தின் மகளான இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் காடுகளையும், அங்குள்ள உயிரினங்களையும் பாதுகாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல், நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுடன் இணைந்து பணியாற்றுவதே இவரது தனித்துவம்.
நேஷனல் ஜியோகிராஃபிக் அமைப்பின் ‘ஆண்டின் சிறந்த ஆய்வாளர்’ விருது என்பது, அறிவியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் உலகையே மாற்றக்கூடிய கண்டுபிடிப்புகளைச் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
கிருத்தி கரந்த், குறிப்பாக மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே நிலவும் மோதல்களைக் குறைக்க தொழில்நுட்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தீர்வு கண்டதற்காக இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விலங்குகளால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இழப்பீடு பெற்றுத் தரும் ‘வைல்டு ஸீ’ (Wild Seve) மற்றும் குழந்தைகளுக்கு இயற்கை விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘வைல்டு ஷாலா’ (Wild Shaala) போன்ற திட்டங்கள் இவரது சாதனையில் மிக முக்கியமானவை.

வனவிலங்குகள் மீது மக்களுக்கு இருக்கும் பயத்தைப் போக்கி, அவற்றை நேசிக்கக் கற்றுக்கொடுத்த இவரது பணி, இன்று உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “காடுகளையும் விலங்குகளையும் காப்பாற்றுவது என்பது மனித இனத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவது போன்றது” என்று கூறும் கிருத்தியின் இந்த வெற்றி, இந்தியாவில் அறிவியல் துறையில் சாதிக்கத் துடிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமருந்தாக அமைந்துள்ளது.
வரலாற்றில் இடம்பிடித்துள்ள இவரது இந்தப் பயணம், இயற்கை பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.