சென்னை: ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு அதிமுக நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். மேலும், புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஓ.பன்னீர்செல்வம் 10 பேரையும், பழனிசாமி 14 பேரையும் நீக்கியுள்ளனர். ஓபிஎஸ் அணி அதிமுகவுக்கு இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் வருகின்றனர். இதனிடையே நேற்று 10 மாவட்டச் செயலாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கி பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் கட்சிக்கு இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஆர்.வைத்திலிங்கம் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் ஜேசிடி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியில் மாவட்டச் செயலாளர்களாக இருந்த பி.பலராமன் (திருவள்ளூர் வடக்கு). எம்.சி.சம்பத் (கடலூர் வடக்கு), சொரத்தூர் இரா.ராஜேந்திரன் (கடலூர் தெற்கு), பி.பாலகிருஷ்ண ரெட்டி (கிருஷ்ணகிரி மேற்கு), உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (திருப்பூர் புறநகர் மேற்கு), ஆர்.கே.ரவிச்சந்திரன் (விருதுநகர் கிழக்கு), கே.டி.ராஜேந்திர பாலாஜி (விருதுநகர் மேற்கு), சி.கிருஷ்ண முரளி (தென்காசி வடக்கு) ஆகிய 10 பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதனிடையே, 14 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் கட்சியில் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகித்த சி.ராஜேந்திரன், கே.எஸ்.சீனிவாசன், ஆர்.ராஜலட்சுமி, எஸ்.எம்.கே.முகம்மது அலி ஜின்னா, எம்.பாரதியார், பி.எஸ்.சிவா, ஆம்னி பஸ் அண்ணாதுரை, எம்.ஆர்.ராஜ்மோகன், சி.ராமச்சந்திரன், மணவை ஜெ.ஸ்ரீதரன் ராவ், டி.சுஜைனி, ஆர்.விஜய் பாரத், வி.மோகன பிரியா, ஜி.மோகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தொண்டர்களிடையே வேதனையையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.