புதுடெல்லி: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் நிலப் பிரச்னை தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், இன்ஜினீயரான போரிஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் தண்டனையை உறுதி செய்யக் கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. இந்த உத்தரவுக்கு எதிராகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் ஏழு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல்முறையீடு செய்திருந்தனர். அதேப்போன்று விசாரணை தொடர்பான ஆவணங்களையும் வழங்குமாறு அவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், ‘வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் தெரிவித்திருந்தனர். இவ்வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு மனுவின் சாராம்சங்களை வாதங்களாக வைத்தார்.
இதையடுத்து உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் விசாரணை ஆவணங்கள் வழங்குவது தமிழக காவல்துறை பதிலளிக்க வேண்டும். இருப்பினும் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம். ஆனால் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.