மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் நியமனம்: மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபப்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. திட்டமிடப்பட்ட காலத்தில் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில், 2020ஆம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் (ஜெய்கா) மத்திய அரசு கடன் கேட்டது. இதனால்தான் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது. மேலும், கடன் திட்டத்தை அங்கீகரித்துள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்கும் கால அளவை பொறுத்து மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து, ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 26.03.2021 அன்று கையெழுத்தான நிலையிலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இன்னமும் பணிகள் தொடங்கப்படவில்லை. முன்னதாக, எய்ம்ஸின் 95 சதவீத பணிகள் மிக விரைவில் முடிவடைந்துள்ளன. அது இந்திய பிரதமரால் விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.