தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகியிருக்கிறது வாரிசு. வம்சி பைடிபள்ளி இயக்கியிருக்கும் இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரசுடு எனவும் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு ஆந்திராவில் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர்கள் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு, “பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன.
நேரடி தெலுங்கு படத்திற்கு டப்பிங் படங்களைவிட கம்மியான அளவில்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளை அதிகமாக ஒதுக்கவேண்டும் என்றும் மிச்சம் இருக்கும் திரையரங்குகளை டப்பிங் படங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தற்போது அவரது படத்துக்கே எமனாக வந்து நிற்கிறது.
டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்று அதிரடியாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் பான் இந்தியா என வந்துவிட்ட இந்தக் காலத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது விரும்பத்தகக்து அல்ல என விஜய்க்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் வாரிசு படத்துக்கு சிக்கல் எழுந்திருக்கும் சூழலில் பனையூரில் விஜய் இன்று தனது மன்ற நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யவே இந்தச் சந்திப்பு என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்துக்கு படம் ஏதாவது ஒரு சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக விஜய் சில முடிவுகளை விரைவில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான அச்சாரமாகவும், அதுகுறித்து ஆலோசிக்கும் விதமாகவும் இன்று இந்த சந்திப்பு இருக்குமெனவும் தகவல் வெளியாகிறது.