வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் அவசர கடிதம்… விஷயம் இதுதான்!

தமிழக முதல்வர்

, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், ’28-11-2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு நமது ஆதரவு தேவைப்படுவதாக முதலமைச்சர் தமது கடிதத்திவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் 105 மீன்பிடிப் படகுகள் தற்போது இலங்கை வசம் உள்ளன என்றும், தொடர் முயற்சிகளின் காரணமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நமது மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் தாம் வலியுறுத்த விரும்புவதாகவும், பாக்ஜலசந்திப் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும்’ எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது, இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற தனது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்த முதலமைச்சர், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியிருந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இவ்வாறு மாதம் ஒருமுறை என முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து கடிதம் எழுதி வந்தாலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.