சென்னையில் புதிய கார்களை திருடி நெல்லையில் விற்பனை; திடுக் தகவல்கள் அம்பலம்

நெல்லை: சென்னையில் புதிய கார்களை திருடி போலி ஆவணங்கள் தயாரித்து தென் மாவட்டங்களில் விற்ற நெல்லை ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.  
சென்னை தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக புதிய கார்கள் திருட்டு போனது. இதுகுறித்து தாம்பரம் மற்றும் ஆவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து சென்னையில் கார்களை கடத்திய விவரம் தெரிய வந்தது.

சென்னை தாம்பரம், ஆவடி உள்ளிட்ட அங்குள்ள சில பகுதிகளில் புதிய கார்களை திருடியது தெரிய வந்தது. திருடிய கார்களுக்குரிய ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போன்று போலியாக தயாரித்து ஆட்டோ டிரைவரும், அவரது கூட்டாளிகளும் காருடன் தப்பித்து தென் மாவட்டங்களுக்கு வந்து புரோக்கர்களை அணுகி, காரின் உரிமையாளர் அவசரமாக வெளிநாட்டில் வேலைக்கு  செல்வதாலும் செலவிற்கு பணம் அவசரமாக தேவைப்படுவதாலும், கார்களை குறைந்த விலைக்கு விற்கவுள்ளதாகவும், புரோக்கர்களுக்கு அதிகளவில் கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறுவர்.

இதனை நம்பி கார் வாங்க வருபவர்களிடம் இந்த கும்பல் அட்வான்சாக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் வாங்கிக் கொண்டு தப்பி விடுவர். இப்படியும் பலரை ஏமாற்றி வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட கார்களை திருடி விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடி கும்பலிடம் இருந்து இரு கார்களை போலீசார் பறிமுதல் செய்ததும் ஆட்டோ டிரைவரும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்துள்ளனர். ஆட்டோ டிரைவரும் கூட்டாளிகள் மேலும் 8 பேரை  போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.