வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிபெண் தொடர்பில் ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக் ஷ . பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களுக்கான 2023 வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இன்று (03) இடம்பெற்றது விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக் ஷ, இலங்கையை சேர்ந்த வீட்டு பணிப்பெண்களுடன் சில தரப்பு முறைகேடாக நடந்து கொள்வதாக, ஊடகங்களின் வாயிலாக பிரச்சாரப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுவதாக தெரிவித்தார்.
ஆகவே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இவ்வாறான பிரச்சாரங்களின் மூலம் குறித்த வீட்டு பணிப்பெண்களின் குடும்பங்களுக்கும் பிரச்சனை ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரட்ன:
நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈட்டக்கூடிய தொழில் வாய்ப்புகளை இனங்காண வேண்டும் என விவாதத்தில் பங்கேற்ற ராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரட்ன கூறினார்.
குறைந்த கல்வித்தரத்துடன் வெளிநாட்டு வேலைவாய்புகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய கூறினார்.
நிர்மாணத்துறையில் பல பிரச்சனைகள் நிலவுகின்றன. அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வீடமைப்புக்கு பயன்படுத்தப்படும் சீமேந்து, இரும்பு போன்றவற்றின் விலை அதிகரித்திருப்பதனால் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.
நகர வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நகரப்புறங்களில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான விவாதத்தின் போது தெரிவித்தார்.