புதுடெல்லி,
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
அதன்படி, ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மம்தா பானர்ஜி, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமிதஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜி-20 மாநாடு நடத்துவதற்கு முன்பு துணை மாநாடு நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.