திருவண்ணாமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது.

அதில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது.

மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்துவரும் நிலையில், பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் அங்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.