மஞ்சள் உடை அணிவதற்கே பயந்தேன் : ஐஸ்வர்ய லட்சுமி

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்ய லட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்னதாக அவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் பூங்குழலி கதாபாத்திரத்திற்கு அடுத்ததாக இந்தப் படத்தில் அவர் நடித்துள்ள மல்யுத்த வீராங்கனை கதாபாத்திரம் இன்னும் அதிக வரவேற்பை அவருக்கு தேடி தந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, சிறுவயதில் பாலியல் சீண்டலுக்கு தானும் ஆளானதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு சமயத்தில் தவறான தொடுதலை அவரது வாழ்க்கையில் சந்தித்து இருப்பார் என்று தான் நினைக்கிறேன். இப்போதும் கூட அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும் என்னுடைய சிறுவயதில் குருவாயூரில் அதுபோன்று ஒரு கசப்பான நிகழ்வு நடந்தது. அன்றைய தினம் நான் மஞ்சள் நிறத்தில் ஸ்ட்ராபெரி டிசைன் செய்யப்பட்டிருந்த பிராக் ஒன்றை அணிந்திருந்தது இப்போதும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த சமயத்தில் அந்த நிகழ்வுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றுகூட தெரியவில்லை.

அந்த நிகழ்வுக்கு பிறகு, மஞ்சள் நிறத்தில் உடை அணிந்தாலே, இதுபோன்று ஏதாவது சங்கடங்கள் வந்து விடுமோ என்று பல நாட்களாக பயந்தது உண்டு. ஆனாலும் அந்த பயத்தில் இருந்து மீண்டு வந்து விட்டேன். இப்போது அதிக அளவில் மஞ்சள் உடை தான் அணிகிறேன். கார்கி படத்தில் கூட இந்த விஷயம் தான் விவாதிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற விஷயங்களை சினிமாவில் விவாதிப்பதற்கு முன் வரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.