ஜார்கண்ட்டில் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெடித்து சிதறிய மாதிரி ராக்கெட்: 11 மாணவர்கள் காயம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சோதனை ராக்கெட் வெடித்து சிதறியதால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகள் பல்வேறு சோதனைகள் மற்றும் கருவிகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்து கொண்டிருந்தனர். மாதிரி ராக்கெட் ஒன்றை வடிவமைத்திருந்த மாணவ குழு அதனை இயக்கம் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக ராக்கெட் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மாதிரி ராக்கெட் வெடித்ததில் அதனை இயக்கிய மாணவர்கள் இருவர் உள்ளிட்ட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 மாணவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாதிரி ராக்கெட் வெடி விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.