ஹிஜாப் எதிர்ப்பு: இளைஞரை பொதுவெளியில் தூக்கிலிட்ட இரான் அரசு – வலுக்கும் கண்டனங்கள்!

இரானில் கடந்த சில மாதங்களாக, முஸ்லிம் பெண்கள் மீதான அரசின் புதிய ஆடைக்கட்டுப்பாடு கொள்கைக்கெதிராக பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல், ஹிஜாப் சரியாக அணியவில்லை என கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், போலீஸ் காவலிலேயே உயிரிழந்தது நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது. அதைத் தொடர்ந்து மஹ்சா அமினி இறப்புக்கு நியாயம் வேண்டி நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – இரான்

இரானிய அரசும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துதல், அவர்களைக் கைதுசெய்தல் என கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரானிய அரசின் இத்தகைய நடவடிக்கையில் இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதோடு 15,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனையும் விதிக்கிறது இரானிய அரசு. அந்த வரிசையில், சுமார் 20 பேருக்கு இரானிய அரசு மரண தண்டனை விதித்திருக்கிறது. அதில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது.

மஜித்ரேசா ரஹ்னவார்ட்

தற்போது இரண்டாவது முறையாக, மஜித்ரேசா ரஹ்னவார்ட் (Majidreza Rahnavard) என்ற 23 இளைஞர், நேற்று அதிகாலை மஷாத் (Mashhad) நகரில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் கிரேனில் (crane) தூக்கிலிட்டு அரசால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி அரசு தரப்பில், நவம்பர் 17-ம் தேதியன்று அன்று மாஷாத்தில் இரண்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவரை, மஜித்ரேசா கொன்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மஜித்ரேசா இறக்கும் வரையில் அவரின் தாயாருக்கு இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் மஜித்ரேசா மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் மனித உரிமை அமைப்புகள், எந்தவிதமான நடைமுறைகளும் இல்லாமல் போலியான விசாரணைக்குப் பிறகு, எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டியிருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.