இராணுவத்தினரின் விவசாய அறுவடைகள் மட்டக்களப்பு அரச அதிபரிடம் கையளிப்பு

மட்டக்களப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய அறுவடைகள் இராணுவத்தின் 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலுப பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி மேஜர் நிமால் பத்மசிறியினால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மண்முனைப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் இராணுவத்தின் 11 எஸ்.ஆர் சிங்க படைப் பிரிவினால் விவசாயப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மண்முனைப் பற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கர்பலா கிராமத்தில், நான்கரை ஏக்கர் பற்றைக் காடுகளாக இருந்த அரச காணியினை இராணுவத்தினர் பொறுப்பேற்று, ஒருங்கிணைந்த சேதன விவசாயப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு கௌபி,பயறு, கச்சான் போன்ற தானியங்களுடன் மரவள்ளி, பயற்றை, புடோல், பாகல், சுரக்காய் போன்ற மரக்கறி வகைகள் பயிரிடப்பட்டு, மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிகழ்வில் மண்முனைப் பற்றுப் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியாநந்தி,மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.ஹரிகரன், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் உதயராணி குகேந்திரன், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஜி. பேரின்பராசா, லெப்டினன் கேர்னல் தம்மிக ஆகியோர் கலந்துகொண்டனர்.

M M Fathima Nasriya

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.