கர்நாடகாவில் முதல்முறையாக தமிழ் புத்தக திருவிழா… நாளை தொடக்கம்!

கர்நாடக தமிழர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் முதன் முறையாக டிச.25 முதல் ஜன.1ஆம் தேதிவரை பெங்களூரு நகரில் அல்சூர் பகுதியில் உள்ள தமிழ் சங்கத்தில் 8 நாட்களுக்கு தமிழ் புத்தக திருவிழா நடக்க இருக்கிறது.

கர்நாடக தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து இந்த புத்தக திருவிழாவை நடத்துகின்றனர். டிச.25ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழாவில் மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.ஆனந்த்குமார், தினச்சுடர் ஆசிரியர் பா.அமுதன்,கர்நாடக தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் அ.தனஞ்செயன் ஆகியோர் தலைமையில் அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை தொடக்கிவைக்கிறார். 

இத்திருவிழாவில், சங்ககாலம் முதல் நவீனகாலம் வரையிலான இலக்கியப்படைப்புகள் அனைத்தும் விற்பனைக்கு கிடைக்கும்‌ தமிழ்ப் புத்தகத் திருழாவில் கொள்முதல் செய்யப்படும் அனைத்து நூல்களுக்கு 10 சத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. 

தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையில் புத்தகக்காட்சி அரங்குகள், பொதுமக்கள் வருகைக்காக‌ திறந்து வைக்கப்பட்டிருக்கும். அனுமதி இலவசம், மாணவர்களிடையே தமிழை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்புச்சீட்டு அளிக்கப்படும்.

புத்தகக்காட்சியில் இடம்பெற்றிருக்கும் அரங்கங்களில் ரூ.100 மதிப்புள்ள அன்பளிப்புச்சீட்டை அளித்து விரும்பிய நூலை வாங்கிக்கொள்ளலாம். பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் இராம்பிரசாத் மனோகர், ஜி.மோகன் உள்ளிட்ட கொடையாளர்களின் உதவியால் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பாக அளிக்கப்படுகின்றன. தமிழ்ப் புத்தகத் திருவிழா வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாகும்.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களிடையே, குறிப்பாக தமிழ் குழந்தைகளிடம் தமிழ்மொழியை கற்கும் ஆர்வத்தை தூண்டிவிடும் நோக்கில் நடத்தப்படும் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக 8 நாட்களும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு மொழித்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

கல்லூரி மாணவர்களுக்கு சொற்பொழிவு, கவிதை, ஓவியம், கட்டுரைப்போட்டிகளும், பள்ளி மாண‌வர்களுக்கு உலகநீதி ஒப்புவித்தல், மாறுவேடப்போட்டிகள்(ஆரம்பப்பள்ளி), திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டிகள்(நடுநிலைப்பள்ளி), சொற்பொழிவு, பாடல் போட்டிகளும்(உயர்நிலைப்பள்ளி), பொதுமக்களுக்கு சொற்பொழிவு, கவிதை, கட்டுரைப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 12 பரிசுகளும், பொதுமக்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 9 பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 18 பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த போட்டிகளில் சிறப்பிடம் பிடிக்கும் பள்ளிகளுக்கு கேடயம் பரிசாக‌ அளிக்கப்படுகிறது. ஜன.1ஆம் தேதி நடக்கும் நிறைவுவிழாவில், இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

Karnataka Tamil Book Fair

கர்நாடகத்தில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள், பதிப்பகங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சிறந்த நூல் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் சிறந்ததாக‌ தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கு 6 பரிசுகள் வழங்கப்படும். இப்பரிசுக்கான மொத்தத்தொகை ரூ.15 ஆயிரம் ஆகும்.

இத்திருவிழாவில், தமிழ் மூதாதையர்கள் இளம் வயதில் விளையாடி மகிழ்ந்த, தற்போது வழக்கொழிந்த‌ தாயக் கட்டை, தட்டாங்கல், சொக்கட்டான், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பாம்பும் ஏணியும், பம்பரம், மூன்றுகல் ஆட்டம், சங்கு சக்கரம், கிச்சு கிச்சு தாம்பலம், கைத் துடுப்பாட்டம், கரகர வண்டி, ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையா முந்திரிக்காய், நொண்டி போன்ற தமிழ்மரபு விளையாட்டுகள் 8 நாட்களுக்கு இடம்பெற்றிருக்கும். 

இம்மாகுலேட் ஆண்டனி, குழந்தைகளுக்கு தமிழ்மரபு விளையாட்டுகளை கற்றுத்தரவிருக்கிறார். மாணவர்களின் அறிவியல் திறனறி, புலனறி உணர்வை மேம்படுத்த ஜன.26,27ஆம் தேதிகளில் பேபி ஜெயக்குமார் அவர்கள் நடத்தும் மாயவித்தைக் காட்சி (மேஜிக் ஷோ) தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

டிச.25 முதல் ஜன.1ஆம் தேதிவரையில் தினமும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை இலக்கியமாலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தமிழ், கன்னட நூல்கள் வெளியீடு, பாவரங்கம், கலந்துரையாடல், பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கும். 

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சிந்தனைக்களம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளில் கவியருவி அப்துல்காதர், பாவலர் அறிவுமதி, விஞ்ஞானி வி.டில்லிபாபு, தமிழறிஞர் சு.குமணராசன், தொல்லியல் ஆய்வாளர் திரு.கே.அமர்நாத் இராமகிருஷ்ணன், இஸ்ரோ மேனாள் தலைவர் கே.சிவன் உள்ளிட்டோர் சிந்தனை உரை வழங்கவிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தமிழுணர்வை ஊக்குவிக்கும் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.