பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கியை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அப்துல் ரஹ்மான் மக்கி பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை மூளைச்சலவை செய்து தாக்குதலுக்கு தயாராக்குவது, குறிப்பாக இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த இளைஞர்களைத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியாவில் 2011 நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நடந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் தான் இந்த அப்துல் ரஹ்மான் மக்கி. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தேவையான அனைத்து நிதி ஆதாரங்களையும் திரட்டுவதில் இவர் முக்கியப் பங்கு செலுத்தி வருகிறார். 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புக் குழு அப்துல் ரஹ்மான் மக்கியை குற்றவாளி என அறிவித்து சிறைத் தண்டனை விதித்தது.

‘இந்தியா மீது போர் தொடுத்து பாடத்தை கற்றுக் கொண்டோம்’ – பாக். பிரதமர் பளீச்!

இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், இந்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வந்தது. இதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

இந்நிலையில் சீனா தனது தடையை விலக்கி கொண்ட நிலையில், அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.