அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா- எகிப்து இடையே ரூ.97 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம்: மோடி உறுதி

புதுடெல்லி: இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா- எகிப்து இடையே ரூ.97 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் இன்று நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்க எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அப்தெல்லுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

அதை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் அப்தெல் பட்டா பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, ‘‘இந்தியா, எகிப்து நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கூட்டு ராணுவ பயிற்சி அதிகரித்துள்ளது. எல்லை கடந்த தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க இரு நாடுகளும் ஒப்பு கொண்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளின் இரு தரப்பு வர்த்தகம் ரூ.97 ஆயிரத்து 908 கோடியை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.