காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' – டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், சம்பிரதாயத்துக்குக்கூட தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவோ, அல்லது நன்றி தெரிவிக்கவோ இல்லை என்றக் குற்றச்சட்டு திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது. மேலும், மத்தியில் இக்கட்டான நிலையில் காங்கிரஸ் நின்றபோதெல்லாம் திமுக காங்கிரஸுக்கு உறுதுணையாக இருந்தது. இப்போது திமுக ஆட்சியில் இல்லை என்றதும் காங்கிரஸ் கழன்று சென்றுவிட்டது என சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்
தவெக – காங்கிரஸ் நிர்வாகிகள்

அதன் அடிப்படையில் திமுக எம்.பி-யும், தி.மு.க பொருளாளருமான டி.ஆர். பாலு தன் எக்ஸ் பக்கத்தில், “அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம்.

ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம். குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார். இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
ராகுல் காந்தி – காங்கிரஸ்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து, கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுகழகம் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம். குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை.

ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும். திரு ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன.

இரண்டு தேர்தல்களில் திரு ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம். தோல்வி எங்களுக்கு புதிதல்ல! துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்! காலம் பதில் சொல்லும்!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.