திருப்பதியில் தானியங்கி பூந்தி தயாரிக்கும் இயந்திரத்துக்கு ரூ.50 கோடி நிதி கொடுத்த ஜியோ!

ஜியோ நிறுவனத்தின் 50 கோடி ரூபாய் நிதி உதவியுடன் திருப்பதி மலையில் தானியங்கி பூந்தி தயாரிப்பு இயந்திரம் நிறுவப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி மலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இதுபற்றி கூறுகையில், “தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்கமான முறையில் கோயிலுக்கு வெளியே தற்போது தயார் செய்யப்படும் பூந்தி கன்வேயர், பெல்ட் மூலம் கோவிலுக்கு உள்ளே அனுப்பப்படுகிறது.
அங்கு பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பூந்தியை கைகளால் உருண்டை பிடித்து லட்டு தயார் செய்கின்றனர். அந்த லட்டுகள் மீண்டும் கன்வேயர் பெல்ட் மூலம் லட்டு விநியோக கவுண்டருக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
image
திருப்பதி மலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த பணியில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மனித சக்தியை மட்டுமே பயன்படுத்தி பூந்தி தயாரிக்கும் போது காலதாமதம், பொருட்கள் வீணாவது ஆகியவை போன்ற தவிர்க்க இயலாத சம்பவங்கள் நேரிடுகின்றன.
எனவே பூந்தி தயாரிப்பை முழுவதும் இயந்திர மயமாக்குவது பற்றி தேவஸ்தான நிர்வாகம் கடந்த ஓராண்டாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று அங்கு இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் முறையை பரிசீலித்து வந்தனர்.
image
இந்த நிலையில் தானியங்கி பூந்தி தயாரிப்பு எந்திரத்தை பொருத்தி பயன்படுத்த ஐம்பது கோடி ரூபாய் நன்கொடை வழங்க ஜியோ நிறுவனம் முன் வந்துள்ளது. இதையடுத்து விரைவில் ஜியோ நிறுவனத்தின் நன்கொடை மூலம் தானியங்கி பூந்தி தயாரிப்பு எந்திரம் திருப்பதி மலையில் பொருத்தப்படும். இதற்கான செயல்முறை சோதனை விரைவில் துவங்க உள்ளது” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.