நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: கண்ணாடியை உடைத்து தப்பிய பயணிகள்

மேட்டூர்: கோவையிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் புறப்பட்டது. கோவையைச் சேர்ந்த ராஜன்(35) பஸ்சை ஓட்டி சென்றார். 43 பயணிகள் இருந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தர்மபுரி சாலையில் புதுச்சாம்பள்ளிக்கு நேற்று அதிகாலை வந்தபோது பஸ்சின் பின்பகுதியில் இருந்து குபு குபுவென புகை வந்தது. சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. உடனே, டிரைவர் வண்டியை நிறுத்தினர். இதையடுத்து, அனைவரும் முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். சிலர் உடமைகளை அப்படியே விட்டு விட்டு ஜன்னல் வழியாக கண்ணாடியை உடைத்து கிழே குதித்து உயிர் தப்பினர். தகவலின்பேரில், தீயணைப்பு படையினர் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில்  கோபி குருமந்தூரைச் சேர்ந்த தாமோதரன் (33), அவரது மனைவி வினோதினி (30) உட்பட 13 பேர் தீக்காயம் அடைந்தனர். அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.