பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் சாத்தான்குளத்தில் பயனாளிகளுக்கு தவணை தொகை நிறுத்தம்: வீடு கட்டுபவர்கள் அவதி

சாத்தான்குளம்: அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கில் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பயனாளிகள் தாங்களே தங்கள் பொறுப்பில் அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு புதியதாக வீடு கட்டிக் கொள்வதற்கு ₹2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. அந்த பயனாளிகளுக்கு கட்டிடம் அடித்தளம் போடுவதில் இருந்து  பல தவணைகளாக பிரித்து பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சாத்தான்குளம் பகுதியில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி வீடு கட்டிய பலருக்கும் முதல் தவணை பணம் மட்டுமே அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 2,3 வது தவணை மானியம் வழங்கப்படவில்லை. இதனால் பல வீடுகள் அரைகுறையாக கட்டுமான பணியுடன் நிற்கிறது. இதுகுறித்து  பிரதம மந்திரியின் வீட்டு வசதித்திட்டத்தின் மூலம் தேர்வான ஆறுமுகம் என்பவர் கூறியதாவது, ₹2 லட்சத்து 10 ஆயிரத்தில் சொந்த பொறுப்பில் வீடு கட்டிக் கொள்வதற்கு மத்திய கண்காணிப்பு மற்றும் ஒப்புதல் அளிக்கும் குழுவின் கூட்டத்தில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி வீடு கட்ட அஸ்திவாரம் போட்டவுடன் ₹50 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக கட்டி முடிக்கும் பொழுது பணம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்பொழுது பயனாளிகள் 2,3ம் கட்ட பணிகளை முடித்துள்ளனர். ஆனால் பலருக்கும் பணம் மானியம் வழங்காததால் வீட்டு கட்டுமான பணிகளை முடிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர். எனவே பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் அறிவித்துள்ள மானிய உதவியை உடனடியாக கட்டுமானம் முடிந்துள்ள நிலையை ஆராய்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.