திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் விறகு அடுப்பு எரிய வைத்தும் விலை உயர்வுக்கு நூதனமான முறையில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்ற அத்தியாவசிய தேவைகளின் விலை வரலாறு காணாத அளவில் தினந்தோறும் ஏறிக்கொண்டே வருகிறது. மேலும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில்  எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.  பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறும் பெண்கள் ஒப்பாரி பாடல் பாடி கும்பி அடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினசரி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவதால் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலையேற்றம், லாரி தொழில் பெரு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்துதரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.