திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு; கண்மாயில் மனித மண்டை ஓடு மீட்பு: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே, நிலையூர் கண்மாயில் கிடந்த எலும்புகளுடன் மண்டை ஓட்டை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் கிழக்கு பகுதியில் தண்ணீரை ஒட்டிய கரையில் மனித மண்டை ஓடு கிடந்துள்ளது. மேலும், அருகில் பாதி எலும்புகளும், தண்ணீரில் பாதி எலும்புகளும் கிடந்துள்ளன.

இன்று காலை அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் எலும்புகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மண்டை ஓடு, விலா எலும்புகள், கை, கால் எலும்புகள் என ஆங்காங்கே கிடந்த தகவல் காட்டுத்தீ போல் கிராமம் முழுவதும் பரவியது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மண்டை ஓடு, எலும்புகளை சேகரித்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எப்போது இறந்தார்,

கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து உடலை தண்ணீரில் விசி சென்றார்களா, தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காணாமல் போனவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் தடய அறிவியல் சோதனைக்கு பின்னரே இந்த எலும்புக்கூடு ஆண் எலும்புக்கூடா அல்லது பெண் எலும்புக்கூடா என்பது தெரியவரும். நிலையூர் கண்மாயில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.