வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ – `Scripted’ என தமிழக காவல்துறை எச்சரிக்கை

சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள், அரசியல் வட்டாரங்களில் சலசலப்புகள் தொடர்ந்து வந்தது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பேசி, வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உறுதிபடுத்தினர். மேலும், வதந்திகள் பரப்பிய சிலரையும் காவல்துறை கைது செய்ய முனைப்பு காட்டியது.

இந்த நிலையில், மேலும் ஒரு வீடியோ பரவியது. அந்த வீடியோவில் தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சிலர் பேசுவது போல அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் சிலர் தலை, முகம், கைகளில் கட்டுப்போடப்பட்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ‘தமிழ்நாட்டில் வேலை வாங்கிவிட்டு சம்பளம் தரவில்லை. கேட்டால் அடித்து துரத்திவிட்டார்கள்’ எனக் கூறுவது போல் தெரிகிறது.

அந்த வீடியோவை, ட்விட்டர் பக்கத்தில் மனிஷ் காஸ்யப் என்பவர் பதிவு செய்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மக்களிடம் பொய் கூறுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்த வீடியோவை பதிவு செய்யும் போது வீடியோவில் இருப்பவர்கள், சிரித்துக்கொண்டும், யதார்த்தமாக பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அந்த வீடியோவை தமிழ்நாடு காவல்துறை பதிவிட்டு, “எல்லோரையும் எல்லா முறையும் ஏமாற்ற முடியாது. இந்த வீடியோவைப் பார்க்கவும். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. இது முற்றிலும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட சம்பவம். தயவுசெய்து உண்மையை சரிபார்த்து ட்வீட் செய்யவும். பொய்யாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும்” எனத் தெரிவித்திருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.