தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்றும், பீகார் தொழிலாளர்கள் வெளியேறுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், `வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவோர்மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார். மேலும், தமிழகத்திலுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, ‘வடமாநிலத்தவர்மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதல்வர்?’ என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை மையமாக வைத்து வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலைமீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த நிலையில், அண்ணாமலைமீது வழக்கு தொடர்ந்ததைக் கண்டித்து நாளை (மார்ச் 10) பா.ஜ.க சார்பில், அந்தக் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஆர்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர் முன்னிலை வகிக்க, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார். இது தொடர்பாக, ‘பொது நீதிக்காகப் போராடினால் பொய் வழக்கா?’ என்கிற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை. அதில், “மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் மாற்றுக் கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன், அச்சுறுத்தி அடக்குமுறையால் பணியவைக்க ஆளுங்கட்சியான தி.மு.க நினைக்கிறது. ஆகவே, அவசரகதியில், ஆதாரம் இல்லாத வழக்குகளை அடுக்கடுக்காய் தொடுத்து, ஜனநாயகக் கடமை ஆற்றும் மாற்றுக் கட்சித் தலைவர்களையெல்லாம் தொடர் வழக்குகளால் மிரட்டப் பார்க்கிறார்கள்.
ஆட்சிமன்றம் கையில் இருப்பதினால், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதா?
திறனற்ற தி.மு.க ஆட்சியில், திம்பிய திசைகள் எல்லாம், திக்கற்ற நிலையில் நிற்கிறது தமிழகம். ஆனால் செய்ய வேண்டிய மக்கள் பணிகளைச் செய்யாத தி.மு.க, எதிர்க்கட்சிகளை மிரட்டும், எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்கிறோம். ஆளுங்கட்சியினரால், தொடங்கப்பட்ட வடமொழி எதிர்ப்பு கோஷங்கள்… அதில் `போடா’ என்ற சொல், `விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசிவிட்டார்கள்’ என்ற பரபரப்பைக் கிளப்பி, அப்படிப் பேசிய பாதுகாப்பு ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய கோபம், திருப்பூரில் நிகழ்ந்த மோதல், இப்படி கிளப்பிவிடப்பட்ட, வடக்கு தெற்கு வெறுப்புணர்வும் வன்மமும், தேச ஒற்றுமைக்கு பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வின் அடிப்படையில், பொது நீதிக்காக குரல் கொடுத்து அறிக்கை விட்டதற்காக, பொய் வழக்கு போடுகிறார்கள்.

அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். தி.மு.க ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு பா.ஜ.க தொண்டனும் வழக்குக்கும், சிறைக்கும் அஞ்சுவதில்லை. நியாயத்துக்காகப் போராடினால் பொய் வழக்கா… என்ற கேள்வியுடன் திறனற்ற தி.மு.க ஆட்சியின் அராஜகப் போக்கை எதிர்க்கிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.