கன்னட நடிகர் சேத்தன் ஜாமீனில் விடுதலை

பெங்களூரு: இந்துத்துவ அரசியலை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்துத்துவ அரசியல் பொய்களால் கட்டமைக்கப்பட்டது என விமர்சித்திருந்தார். இதுகுறித்து பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீஸார் அவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதையடுத்து அவரை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கு காங்கிரஸாரும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கன்னட நடிகர் சேத்தன் சார்பில் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று அவருக்கு ரூ.25 ஆயிரம் உத்தரவாதம், விசாரணைக்கு ஒத்துழைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சேத்தன் நேற்று மாலை பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.