கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி பாஜகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
அண்ணாமலை மீதுள்ள அதிருப்தி காரணமாகவும், பாஜகவில் பல உள்கட்சி மோதல் நடப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறியும் பாஜகவிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.
மேலும், அதிமுக கூட்டணி விவகாரம், சமூகவலைத்தளங்களில் அவதூறாக பேசும் வார் ரூம் காரணமாகவும் சில பெண் நிர்வாகிகள் பாஜகவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட பாஜக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சோலை குமரன், உழைப்பவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை என்று பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.
இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சோலை குமரன் தெரிவித்தாவது, “முற்றிலும் சேலம் மாவட்டத்தில் பாஜக இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
சேலத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தான் இதற்கு காரணம். என்னை போலவே பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களும் விரைவில் வெளியேறுவார்கள்.
நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்திகரமாக இல்லாததாலும், கட்சியில் உழைக்கும் என்னை போன்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால்தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பாஜகவிலிருந்து வெளியேற உள்ளனர். ஏற்கனவே எனது தலைமையில் கட்சிக்கு வந்த அனைவருமே தற்போது பாஜகவை விட்டு வெளியேறி விட்டனர்” என்று தெரிவித்தார்.