நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள்
உருவாக்கப்படுவதை தடுக்க நீதி சேவைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்க வேண்டும்
என இலங்கை நீதி சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1953ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தை துஷ்பிரயோகம்
செய்து நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற மோதலை
ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச்சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் ஆணையைப்
பாதுகாப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் விண்ணப்பம் தொடர்பாக
இலங்கை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில்
நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் முறுகலை தோற்றுவிக்க
முயற்சிக்கப்படுகிறது.
ஜனநாயக அரசியல் அமைப்பின் முக்கிய தூண்கள்
நிறைவேற்றுத்துறை, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை ஜனநாயக அரசியல்
அமைப்பின் மூன்று முக்கிய தூண்கள் என்றும், அவற்றுக்கிடையே சமநிலைகள் இருக்க
வேண்டும் என்றும் இலங்கை நீதி சேவைகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவு நாடாளுமன்ற சிறப்புரிமைகளை
மீறுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டால், அதன் அடிப்படையில் அந்த உத்தரவை வழங்கிய
நீதிபதிகளை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்கு அழைப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டால், அது சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை
சுதந்திரத்தின் அரிப்புக்கு வழிவகுக்கும்.
இறுதியில் அரச பொறிமுறையின் மொத்த வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று இலங்கை
நீதிச் சேவை சங்கம் எச்சரித்துள்ளது.