வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: துருக்கியில் நடந்த சர்வதேச மாநாட்டின் போது உக்ரைன் தேசிய கொடியை பறித்து சென்ற ரஷ்ய அரசப்பிரதிநிதியை உக்ரைன் எம்.பி. தாக்கி தேசிய கொடியை மீட்ட சம்பவம் நடந்தது.
துருக்கி தலைநகர் அங்காராவில் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 -வது மாநாடு துவங்கியது. இதில் ரஷ்யா, உக்ரைன், அல்பேனியா, அசர்பைஜான், உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அரசப்பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
![]() |
இம்மாநாட்டில் உக்ரைன் அரசப்பிரதிநிதியாக அந்நாட்டு பாராளுமன்ற எம்.பி., அலெக்சாண்டர் மரிகோவ்ஸ் பங்கேற்றார். சம்பவத்தன்று எம்.பி. தனது நாட்டு தேசிய கொடியை கையில் வைத்திருந்தார். அப்போது பின்பக்கம் வேகமாக வந்த ரஷ்ய அரசப்பிரதிநிதி ஒருவர் உக்ரைன் தேசிய கொடியை அவரிமிருந்து பறித்துச்சென்றார். சட்டென ஆவேசமடைந்த உக்ரைன் எம்.பி. , ரஷ்ய அரசப்பிரதிநிதியை துரத்தி சென்று தாக்கி அவரிடமிருந்து தேசிய கொடியை மீட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருவரிடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்த சக அதிகாரிகள் தலையிட்டு தடுத்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மீது நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்ய குற்றம்சாட்டி வருகிறது.இந்த சூழ்நிலையில் இன்று நடந்த சம்பவம் மாநாட்டிற்கு வந்த சக நாட்டு பிரதிநிதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
