சாராவை ஹீரோயினாக அறிமுகப்படுத்துவேன் : ஏ.எல்.விஜய் சொல்கிறார்

12 ஆண்டுகளுக்கு முன் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, நடிப்பில் வெளியான 'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா. ராஜ் அர்ஜூன் என்ற துணை நடிகரின் மகள்தான் சாரா. இந்த படத்தில் மனவளர்ச்சி குன்றிய விக்ரமின் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் சாராவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் படிக்க போய்விட்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏ.எல்.விஜய் சாராவை 'சைவம்' படத்தில் நடிக்க வைத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் பதின்மவயது நந்தினியாக (ஐஸ்வர்யாராய்) நடித்தார். அவரின் தோற்றமும், அழகும், அவர் அணிந்து நடித்த உடைகளும் வெகுவாக பாராட்டுகளை குவித்தது. இந்த நிலையில் தானே சாராவை ஹீரோயினாக அறிமுகப்படுத்த இருப்பதாக ஏ.எல்.விஜய் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது “குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பது மிகவும் எளிது. அவர்களின் மூளை மிகக் கூர்மையாக வேலை செய்யும். சாராவும் அப்படித்தான், நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு அவ்வளவு இயல்பாக நடிப்பார். அது நடிப்பாக இல்லாமல், ஒரு குடும்பத்தில் சிறுமி ஒருத்தி வாழ்வதுபோல் இருக்கும். பொன்னியின் செல்வனில் மணி சார் சாராவை தெய்வீக அழகுடன் சித்திரித்துவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் 2025ம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்”என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.