சென்னை: விஷ்ணு பகவானின் தசாவதாரத்தில் 10வது அவதாரமே கல்கி அவதாரம் என புராணங்களில் கூறப்பட்டுள்ள நிலையில், அந்த அவதாரம் எப்போது வரும் என ஜோதிட ஆலோசகர் பாரதி ஸ்ரீதர் அளித்த பேட்டி வெளியாகி உள்ளது.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில், அதன் டீசர் வெளியாகி மிகப்பெரியளவில் டிரெண்டானது.
இந்நிலையில், மீண்டும் கல்கி அவதாரம் குறித்த பேச்சுக்களும் விவாதங்களும் கிளம்பி உள்ள நிலையில், ஜோதிட ஆலோசகர் பாரதி ஸ்ரீதர் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
பிரபாஸ், கமல் நடிக்கும் கல்கி: ஆதிபுருஷ் என ராமராக பிரபாஸ் நடித்த நிலையில், அடுத்ததாக நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கல்கி திரைப்படம் உருவாகி உள்ளது.
அடுத்த ஆண்டு கல்கி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், 2898 AD என அந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் 800 ஆண்டுகள் கழித்து கல்கியின் அவதாரம் இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
கல்கி அவதாரம் எப்போது?: இதுவரை 4 யுகங்கள் முடிந்துள்ளதாகவும் கலியுகம் நடைபெற்று வருவதாகவும் இதன் உச்சத்தில் ஏகப்பட்ட அநியாயங்களும் அக்கிரமங்களும், கெட்ட சக்திகளும் தலை விரித்து ஆடும் போது கல்கியாக விஷ்ணு பகவான் அவதாரம் எடுப்பார் என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என பாரதி ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இப்பவே பசி, பஞ்சம், கொரோனா, ரஷ்யா போர் என பெரிய இழப்புகளையும் கொடுமைகளையும் சந்தித்து வருகிறோம். இதை விட பல பெரிய போர்களும், மக்கள் வாழ்க்கை முறையே சீர்குலைந்து போகும் போது கல்கி அவதாரம் எடுத்து விஷ்ணு பகவான் நல்லவர்களை காப்பார் என அவர் கூறியுள்ளார்.

வெள்ளை குதிரையில் வருவார்: கல்கி அவதாரத்தில் கையில் வாளுடன் வெள்ளைக் குதிரையில் விஷ்ணு வருவார் என்றே சொல்லப்பட்டு வருகிறது. அதற்கான காலம் வரும் போது கல்கி அவதாரம் எடுத்து விஷ்ணு வருவார் என்ற ஜோதிடர் விஷ்ணுவின் வாகனமான கருடன் தான் அந்த குதிரையாக மாறும் என்றும் கூறியுள்ளார்.
கல்கி அவதாரம் எடுத்து கடவுள் வரும் போதெல்லாம் நாம் எந்த ஜன்மத்தில் இருப்போம் என்று கூட தெரியாது என்றும் இன்னும் சில லட்ச வருஷங்கள் கூட ஆகலாம் என பாரதி ஸ்ரீதர் பேசியுள்ளார். கலியுகம் எப்படி இருக்கும் என வியாச முனிவர் ஞான திருஷ்டியில் பார்த்தே கண் கலங்கி விட்டார் என்றும் அந்த அளவுக்கு கோரத்தை இந்த உலகம் சந்திக்கும் என்றும் கூறியுள்ளார்.