இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹாருக்கு ஆட்டத்தின்போது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடந்து முடித்த ஐபிஎலில் சில போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகளில் அவரால் விளையாட முடியாமல் போனது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தீபக் சஹார் தனது உடற்தகுதி குறித்தும் தோனி குறித்தும் பேசியிருக்கிறார். ஒரு வீரர் காயங்களால் ஏமாற்றம் அடையக்கூடாது. காயம் ஏற்படுபவதும், ஏற்படாததும் வீரரின் கையில் இல்லை. இப்போதைக்கு என்னுடைய முன்னுரிமை உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொளவதும், இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்பது மட்டும்தான். வாய்ப்பு கிடைத்தால் அணிக்காக என்னுடைய 100 சதவிகிதத்தை வழங்குவேன். மிக மோசமான நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன்.

கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன். தற்போது எனது பந்துவீச்சு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அணிக்குத் திரும்ப முயல்கிறேன் என்று பேசியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து தோனி குறித்துப் பேசிய அவர், “ தோனியிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. என்னைத் தம்பியாகத்தான் நினைக்கிறார். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருக்கிறது.
நாங்கள் இருவரும் சேர்ந்து ஜாலியாக விளையாடுவோம். ஐபிஎல் இறுதிபோட்டியில் சி.எஸ்.கே அணி வென்றபோது அவரிடம் ஆட்டோகிராப் கேட்டேன். அதற்கு நீ கேட்சை பிடிக்காததால் நான் ஆட்டோகிராப் போடமாட்டேன் என்று ஜாலியாக சொன்னார். ஒரு கிரிக்கெட் வீரராகவும் தனிப்பட்ட மனிதனாகவும் அவரை மிகவும் மதிக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற LGM படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவின்போது பேசிய தோனி “தீபக் சஹார் போதைப் பொருளைப் போன்றவர். அவர் அருகில் இல்லையென்றால் அவர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதேநேரத்தில் உடனிருந்தால் ஏன் அருகில் இருக்கிறார் எனத் தோன்றும்” என ஜாலியாகப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.