ஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்… மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் ஜகர்சுகுடா – சம்பல்பூர் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் ஜகர்சுடாவில் இருந்து புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக மாடு தண்டவாளத்தின் குறுக்கே வந்ததால் மாடு மீது மோதிய வேகத்தில் ரெயில் தடம்புரண்டது.

தண்டவாளத்தை விட்டு, ரெயிலின் சக்கரம் சில அடிகள் கீழே இறங்கியது. என்ஜினில் இருந்து நான்காவது பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கின. உடனடியாக சுதாரித்த ஓட்டுநர், ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால், ரெயில் கவிழாமல் தப்பியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் இல்லை. தகவலறிந்த ரெயில்வே போலீசார் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மருத்துவ உபகரணங்களுடன் மறுசீரமைப்புக்கான நிவாரணப் பொருட்களைக் கொண்ட விபத்து நிவாரண ரெயில் உடனடியாக அந்த இடத்தை அடைந்தது. ரெயில் சக்கரம் தடம்புரண்ட தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, 2 மணி நேரத்திற்குப் பிறகு,ரெயில், 30 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டு இயக்கத்தை தொடங்கியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.