பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா,

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும், ஜோ ரூட் 60 ரன்களும், பேர்ஸ்டோ 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹரீஷ் ராஃப் 3 விக்கெட்டுகளும், முகமது வாசிம், ஷாகீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 338 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக அகா சல்மான் 51 ரன்களும், பாபர் அசாம் 38 ரன்களும், முகமது ரிஸ்வான் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அதே சமயம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் கை நழுவிப்போனது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.