தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள ஏரல் வட்டம், திருக்களூர், உடையார் குளம் கிராமங்களில் இன்று (டிச.29) கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரணத் தொகையினை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலில் இருந்து மக்களை மீட்க அனைத்து துறையினரும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றினைந்து பணியாற்றி தற்போது சகஜ நிலை திரும்பி வருகிறது.தமிழக முதல்வர் கடந்த டிச.21 அன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தும், ஆய்வுக்கூட்டங்கள் வாயிலாக பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்து, இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்ப்பதற்காக பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
”அதி கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும்” என முதல்வர் அறிவுப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதன்படி பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி டிச.26 முதல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது அனைத்து வட்டங்களிலும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.தமிழக முதல்வர் அறிவுறுத்தலிபடி கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தூத்துக்குடி மாவட்ட ஏரல் வட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரணப்பணி நடைபெற்று பகுதிகளை ஆய்வு செய்தார். அது சமயம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கி வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணத்தொகையினையும் வழங்கினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.