உத்தரப் பிரதேசம்: உறங்கிக்கொண்டிருந்த அம்மா, மகள் மீது ஆசிட் வீசிய கொடூர செயல்..!

பெண்கள் மீது ஆசிட் வீசித் தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அம்மா மற்றும் அவரின் குழந்தை மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.

அமேதி அருகில் உள்ள சுபவத்பூர் என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பானுமதி (27) என்ற பெண் தன் 3 வயது மகளுடன் வீட்டில் படுத்திருந்தபோது அங்கு வந்த இரண்டு பேர் ஆசிட் வீசிவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்கள் இரண்டு பேரும் அப்பெண்ணிடம் இருந்த மொபைல் போனையும் பறித்துச் சென்றனர். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தியுள்ளனர். ஆசிட் வீசப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குழந்தைக்கு முகம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் வெளிப்படையாக ஆசிட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், யார் வேண்டுமானாலும் ஆசிட் வாங்க முடிகிறது. இது போன்று வெளிப்படையாக ஆசிட் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இம்மனு விசாரணைக்கு வந்த தினத்தன்றுதான் அம்மா மற்றும் அவரின் குழந்தை மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.

வெளிப்படையாக ஆசிட் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதோடு ஆசிட் வீச்சால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீடு மற்றும் கடந்த ஐந்து ஆண்டில் எத்தனை பேர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டனர் என்ற விவரத்தையும் தாக்கல் செய்யும்படி கோர்ட் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.