தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்

சென்னை: மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதையொட்டி, அவசர செயற்குழு, பொதுக் குழு கூட்டத்துக்கு மநீம சார்பில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தங்க வேலு, புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திர மோகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தல்களை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும், மக்களவைத் தேர்தல் கூட்டணி, கட்சி வளர்ச்சி குறித்தும் நிர்வாகிகளுக்கு கமல் ஹாசன் ஆலோசனை வழங்கினார்.

அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து, பல்வேறு கட்சிகள் பேசி வருவதாகவும், கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் நிர்வாகிகளிடம் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி, கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக மநீம செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.